திருச்சியில் ரூ. 2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனர்.
தில்லைநகர், 4-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. ஹோட்டல் கடை உரிமையாளர். இந்நிலையில் விவசாயம் நிலம் வாங்க முடிவெடுத்த இவர்,ரியல் எஸ்டேட் அதிபர்களான மருதாண்டகுறிச்சி பகுதியைச் சேர்ந்த முத்துகுமார், அண்ணாமலை நகரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் ஆகியோரை அணுகியுள்ளார்.
அதற்கு அவர்கள் மருதாண்ட குறிச்சி அருகே தங்களுக்கு சொந்தமான இடம் உள்ளதாக கூறி அந்த நிலத்துக்கு ரூ. 2 கோடி தரவேண்டும் என்று கருப்பையாவிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கருப்பையா அவர்களிடம் ரூ. 2 கோடியை கொடுóத்து நிலத்துக்கான கிராய ஒப்பந்தமும், பத்திர பதிவும் செய்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பையா அந்த நிலத்துக்கான பத்திரத்தை ஆய்வு செய்த போது அது போலி பத்திரம் என்பதும், நிலத்தின் உரிமையாளர் சதீஷ்குமார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் முத்துகுமார், ராஜேஷ்குமார் ஆகியோர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து அவர்களை தேடிவருகின்றனர்.