காரைக்கால், நாகை மாவட்ட மீனவர்கள் 43 பேர் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த சுபாஷ்சந்திரன், ராஜ் என்பவர்களது 2 படகில் செவ்வாய்க்கிழமை அதிகாலை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ரவிச்சந்திரன், கணேசன், இளையராஜா, பூபாலன், பாலன், கணேஷ், ஞானவேல், கவாஸ்கர், ஆரோக்கியராஜ், நீரவர்ணன் மற்றொரு படகில் ராஜ், ராஜேஷ், கோபால், சதீஷ், சந்திரன், வீரமணி, ரவி, பிரபாகரன் ஆகிய மொத்தம் 18 பேர் புறப்பட்டனர்.
மேலும் இதே மாவட்டத்தை சேர்ந்த கீழகாசாக்குடிமேடு கிராமத்தை சேர்ந்த ஒரு படகில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். இவர்களோடு நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த சதீஷ், செல்லியப்பன் என்கிற சுப்ரமணி ஆகியோரது 2 படகுகளில் சென்ற மீனவர்களும் கோடியக்கரைக்கு கிழக்கே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் மொத்தம் 5 படகுகளை சேர்ந்த 43 பேர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் காரைக்கால் மாவட்ட மீனவர்களுக்கு கிடைத்தது..
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் அரசுத் துறையினருக்கு வராத நிலையில், சுபாஷ்சந்திரன், ராஜ் என்பவரது படகில் சென்ற மீனவர்கள், கோட்டுச்சேரிமேடு மீனவ பஞ்சாயத்தார்களை போனில் தொடர்புகொண்டு, கைது செய்யப்பட்ட விவரத்தை தெரிவித்தனர். இதுகுறித்து இக்கிராமப் பஞ்சாயத்தார்கள் காரைக்கால் மீன்வளத்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை துணை இயக்குநர் ந.இளையபெருமாள் தெரிவித்தார். பஞ்சாயத்தார்கள் மூலம் 43 பேர் கைது செய்யப்பட்டதாக கிடைத்த தகவல் என்றும், அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என அவர் தெரிவித்தார்.